Thursday 11 December 2014

சனிப்பெயர்ச்சி பலன்கள் - அனைத்து ராசிகள்

சனிப்பெயர்ச்சி பலன்கள் - மேஷ ராசி ((அசுவினி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம்):

சாதனை படைக்கத் துடிக்கும் மேஷ ராசிக்காரர்களே! இதுவரை 7-ல் கண்டச் சனியாக இருந்து உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பிரச்சனைகளைக் கொடுத்துக் கொண்டிருந்த சனிபகவான் தற்போது அஷ்டமச் சனியாக 8-ம் வீட்டிற்கு வருவதால் மிகுந்த கவனத்தோடு எதிலும் செயல்படவும். இதனால் தீயவர்களின் நட்பு ஏற்படக்கூடும். அவப்பெயர்கள் வரக்கூடும். ஆரோக்கியம் பாதிக்கப்படும். சிலருக்கு ஆபரேஷன் செய்ய நேரிடும். பண விரயம் உண்டாகும். செய்யும் முயற்சிகளில் தடைகள் ஏற்படும். சிலர் ஊர் விட்டு ஊர் செல்லும் நிலைமை ஏற்படும். உறவினர்களிடம் நண்பர்களிடம் பகை ஏற்படும். இவை அனைத்தும் பொதுப்பலன்களே! கோச்சாரப்படி கிரகங்கள் மாறும்போது சில நல்ல பலன்களும் நடைபெற வாய்ப்புண்டு.

பரிகாரம்:  திருநள்ளாறு சனீஸ்வர பகவானை வழிபட்டு வரவும். செவ்வாய்க்கிழமை தோறும் ஆஞ்சநேயரை வழிபட்டு தீபம் ஏற்றி வந்தால் நல்ல பலன்கள் நடைபெறும். சனிக்கிழமை பெருமாளை வணங்கி வரவும்.

சனிப்பெயர்ச்சி பலன்கள் - ரிஷப ராசி (கார்த்திகை 2,3,4 பாதங்கள், ரோஹிணி, மிருகஸ்ரிஷம் 1,2 பாதங்கள்):


காரியத்தில் கண்ணாய் இருக்கும் ரிஷப ராசிக்காரர்களே! இதுவரை 6 ஆம் இடத்தில் இருந்த சனிபகவான் தற்போது 7 ஆம் இடத்திற்கு கண்டச்சனியாக வருகிறார். இதுவரை ஆடம்பரமான வாழ்க்கையை அனுபவித்து வந்த தாங்கள் மிகுந்த கவனமுடன் செயல் படவேண்டும். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்படும். அலைச்சல் அதிகப்படும். நண்பர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். இருவருக்கும் தேவையில்லாத பிரச்சனைகள் உண்டாகும். சிலர் வெளியூர் செல்ல நேரிடும். கோச்சாரப்படி கிரகங்கள் மாறும் போது நன்மைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. மொத்தத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

பரிகாரம்:  சனிஸ்வரனுக்கு எள் தீபம் ஏற்றி வரவும். காகத்திறக்கு எள் சாதம் வைக்கவும். வெள்ளிக்கிழமை அம்பாளுக்கு தீபம் ஏற்றி வழிபட்டு வரவும்.

சனிப்பெயர்ச்சி பலன்கள் - மிதுன ராசி (மிருகசிரீஷம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 பாதங்கள்) 

எதையும் சிந்தித்து செயல்படும் மிதுன ராசிக்காரர்களே! இதுவரை 5 ஆம் இடம் ஆன துலாவில் இருந்து சனிபகவான் தற்போது 6 இடம் ஆன விருச்சிகத்திற்கு வருகிறார். இனி மேல் இவர்களுக்கு நல்ல யோகத்தை அளிக்கப்போகிறார். எதிரிகள் இவர்களை கண்டு பயப்படுவர். உத்தியோகம், தொழில் நல்ல முறையில் அமையும். ஒரு சிலருக்கு சொத்து சேர்க்கை ஏற்படும். வண்டி வாகனங்கள் அமையும். பொருளாதரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.


பரிகாரம்:  மீனாட்சி அம்மனை வழிபட்டு வரவும். புதன் கிழமை தோறும் பெருமாள் கோவிலுக்கு சென்று தீபம் ஏற்றி வழிபட்டு வரவும்.

சனிப்பெயர்ச்சி பலன்கள் - கடக ராசி (புனர்பூசம் 4-ம் பாதம், பூசம், ஆயில்யம்): 
சுய பலத்துடன் செயல்படும் கடகராசிக்காரர்களே! இதுவரை 4-ம் இடத்தில் அர்த்தாஷ்டம சனியாக இருந்த சனிபகவான் தற்போது 5-ம் இடமான விருச்சிகத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். இது மிகவும் நல்ல இடம் என்று கூற முடியாது. இருந்தாலும் 4-ம் இடத்தில் இருக்கும்போது ஏற்பட்ட தடங்கல்கள் மாறி நல்லதே நடைபெறும். தற்போது தாங்கள் சாமர்த்தியமாக செயல்பட முயற்சி செய்ய வேண்டும். குடும்பத்தில் வீண் பேச்சுகள் பேச வேண்டாம். உத்தியோக உயர்வு, பொருளாதாரத்தில் முன்னேற்றம். ஒரு சிலருக்கு வீடு, வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். கணவனிடத்தில் வாக்குவாதம் வேண்டாம். குருபெயர்ச்சிக்குப் பிறகு பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டு.

பரிகாரம்: பௌர்ணமியன்று சத்தியநாராயணா  பூஜை செய்து வந்தால் யோக பலன் கிட்டும். திங்கட்கிழமை சிவன் கோவிலுக்குச் சென்று தீபம் ஏற்றி சிவபெருமானை வழிபட்டு வரவும்.

சனிப்பெயர்ச்சி பலன்கள் - சிம்ம ராசி (மகம், பூரம், உத்திரம் 1-ம் பாதம்):

வெற்றியைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் திறமைசாலிகளே! இதுவரை 3-ம் இடத்தில இருந்த சனிபகவான் தற்போது 4-ம் இடத்திற்கு அர்த்தாஷ்டம சனியாக வருவதால் கவனமுடன் இருக்கவும். உறவினர்களிடத்திலும், நண்பர்களிடத்திலும் கவனமாக பேசவும். தேவையில்லா வீண் விரோதம் உண்டாகும். எதிரிகளால் தொல்லை உண்டாகும். தாயைப் பிரிந்து செல்ல நேரிடும். ஒரு சிலர் வெளியூர் செல்ல நேரிடும். வாகனத்தில் கவனம் தேவை. வீண் பழிச் சொல்லுக்கு ஆளாக நேரிடும். இவர்களுக்கு ராகுவும், கேதுவும் சரியில்லை. குருவும் ஜென்மத்திற்கு வரப்போகிறார். ஆகையால் இந்த ராசிக்காரர்கள் மிகுந்த கவனமுடன் இறை வழிப்பாட்டின் மூலம் பிரச்சனைகளை தீர்க்க வழி செய்யும்.

பரிகாரம்:  விநாயகரை தீபம் ஏற்றி வழிபட்டு வரவும். சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு வெற்றிலைமாலை சாத்தி தீபம் ஏற்றி வழிபட்டு வரவும். ஞாயிறு 4 1/2 6 ராகு காலத்தில் பைரவருக்கு தீபம் ஏற்றி வழிபடவும். தினசரி சூரிய பகவானை வழிபட்டு வரவும்.

சனிப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி ராசி (உத்திரம் 2, 3, 4-ம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ம் பாதங்கள்): 

சாதுர்யமாக பேசி காரியம் சாதிக்கும் கன்னி ராசிக்காரர்களே! இதுவரை உங்களை 7½ ஆண்டுகளாக ஆட்டிப் படைத்த சனீஸ்வர பகவான், தற்போது முழுவதுமாக உங்களை விட்டு 3-ம் இடத்திற்கு செல்கிறார். இனிமேல் உங்களுக்கு நல்ல காலம் தொடங்கிவிட்டது. கணவன், மனைவிக்குள் சந்தோஷம் ஏற்படும். புதிதாக வீடு வாங்கும் யோகம் உண்டு. சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். உறவினர், நண்பர்களிடத்திலுள்ள பகை நீங்கி உறவு பலப்படும். ஒரு சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் உண்டு. ராகு ஜென்மத்தில் உள்ளதால், ராகு, கேது ப்ரீதி செய்யவும்.

பரிகாரம்: வியாழக்கிழமை குரு பகவானுக்கு கொண்டைக்கடலை மாலை சாத்தி, நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வரவும். திருநாகேஸ்வரம் சென்று வரவும். விநாயகரை சங்கடஹர சதுர்த்தியன்று தீபம் ஏற்றி வழிபட்டு வரவும்.

சனிப்பெயர்ச்சி பலன்கள் - துலா ராசி (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி,விசாகம் 1, 2, 3 பாதங்கள்)

தனது பேச்சாற்றலால் எதையும் சாதிக்கும் துலா ராசிக்காரர்களே!  இதுவரை ஜென்மச்சனியாக இருந்த சனிபகவான், தற்போது 2-ம் இடமான விருச்சிகத்திற்கு பெயர்ச்சியாகிறார். ஏழரைச் சனியின் தாக்கத்திலிருந்து இன்னும் விடுபடவில்லை. இருந்தாலும் இதற்கு முன்பிருந்த அலைச்சல்கள், உடல்நிலை பாதிப்பு, கோர்ட் வழக்குகள் இவை அனைத்தும் மாறி நல்ல பலன்களே நடக்க ஆரம்பிக்கும். பொருளாதாரத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் கவனமுடன் பேசவும். வாக்குச்சனி கோப்பைக் கெடுக்கும் என்று கூறுவார்கள். கவனமுடன் பேசவும். சனீஸ்வர பகவான் இனிமேல் நல்ல பாதையில் தங்களை வழி நடத்துவார்.

பரிகாரம்:  யோக நரசிம்மரை வழிபட்டு வரவும். சோளிங்கர் சென்று வரவும். காளிகாம்பாளை வெள்ளிகிழமை வழிபட்டு வரவும்.

சனிப்பெயர்ச்சி பலன்கள் - விருச்சிக ராசி (விசாகம் 4, அனுஷம், கேட்டை) 

பாசமும், அன்பும் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே! இதுவரை விரயஸ்தானமான 12-ம் இடத்தில் இருந்த சனிபகவான், தற்போது ஜென்மச்சனியாக உங்கள் ராசிக்கே வந்துள்ளார். இதனால் தங்களின் முன்கோபத்தை தயவு செய்து அடக்கிக்கொள்ளுங்கள். முன்கோபத்தினால் பல தீய விளைவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. கோர்ட் வழக்குகளில் சிக்கிக் கொள்வீர்கள். ஒரு சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். உத்தியோகம், தொழிலில் பிரச்சனை ஏற்பட வாய்ப்புண்டு. மிகுந்த கவனமுடன் இருக்கவும். பொருள் விரயம், வீண் அலைச்சல் ஏற்படும். பொறுமையுடன் செயல்படவும்.

பரிகாரம்:  திருநள்ளாறு சனீஸ்வர பகவானை வழிபட்டு வரவும். சனிக்கிழமை தோறும் காகத்திற்கு எள் சாதம் வைக்கவும். ஆஞ்சநேயரை வழிபட்டு வரவும். 


சனிப்பெயர்ச்சி பலன்கள் - தனுசு ராசி (மூலம், பூராடம், உத்திராடம் 1-ம் பாதம்):
எதையும் குறிப்பறிந்து செயலாற்றும் தனுசு ராசிக்காரர்களே! இதுவரை 11-ம் இடத்தில் இருந்து நன்மை செய்து வந்த சனீஸ்வர பகவான் தற்போது விரயஸ்தானமான  12-ம் இடத்திற்கு வந்துள்ளார். இதனால் வீண் விரயம் ஏற்படும். தர்க்கங்களை தவிர்க்கவும். வீண் பேச்சுக்களை தவிர்க்கவும். பகைவர்களால் தொல்லை ஏற்படும். பொருள் களவு போக வாய்ப்புண்டு. கவனமாக இருக்கவும். ஒரு சிலர் வீட்டை விற்க முயற்சி செய்வர். அல்லது வீடு பராமரிப்பு வேலைகள் செய்ய வேண்டியதிருக்கும். ஒரு சிலர் வீட்டில் திருமணங்கள் நடைபெற வாய்ப்புண்டு. வீண் விரயமாவதை தெய்வ வழிபாட்டால் குறைக்க முடியும்.

பரிகாரம்: திருப்பதி வெங்கடாஜலபதியை வழிபட்டு வரவும். சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயருக்கு வெற்றிலைமாலை சாத்தி வணங்கி வரவும்.


சனிப்பெயர்ச்சி பலன்கள் - மகர ராசி (உத்திராடம் 1, 2, 3, 4, திருவோணம்அவிட்டம் 1, 2 -ம் பாதங்கள்) 

எதையும் சாமர்த்தியமாக சாதிக்கும் மகர ராசிக்காரர்களே! இதுவரை 10-ம் இடத்திலிருந்த சனிபகவான் தற்போது  11-ம் இடத்திற்கு வருகிறார். இதுவரை தொழில், உத்தியோகத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி சுப யோகத்தை கொடுப்பார். லாபஸ்தானமான 11-ம் இடம் மிகவும் நல்ல இடம். பொருளாதாரம் மேன்மை அடையும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். வீடு, வாகன யோகம் அமையும். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து அதிகரிக்கும். பலருடைய பாராட்டை பெறுவீர். எல்லா வகையிலும் உங்களுக்கு நன்மையே தருவார்.

பரிகாரம்: ஏழைகளுக்கு அன்னதானம் செய்யுங்கள். காளிகாம்பாளை வழிபட்டு வரவும்.

சனிப்பெயர்ச்சி பலன்கள் - கும்ப ராசி (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்) 
பிறருக்கு நன்மை செய்யும் கும்ப ராசிக்காரர்களே! இதுவரை 9-ம் இடத்தில் இருந்த சனிபகவான், தற்போது 10-ம் இடத்திற்கு வருகிறார். இது நல்ல இடமல்ல! தொழில், உத்தியோகத்தில் மாற்றம், இடையூறுகள் போன்ற பலன்கள் நடைபெறும். உடல் நலம் பாதிக்கும். கவனமுடன் செயல்படுவது நல்லது. முன்னேற்றத் தடைகள் ஏற்படும்.

பரிகாரம்: திருச்செந்தூர் முருகனை வழிபட்டு வரவும். நவக்கிரகங்களுக்கு தீபம் ஏற்றி வரவும். 

சனிப்பெயர்ச்சி பலன்கள் - மீன ராசி (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி)
இதுவரை அஷ்டமச் சனியாக இருந்த சனிபகவான், இனிமேல் 9-ம் இடமான பாக்கியஸ்தானத்திற்கு வருகிறார். இதுவரை நீங்கள் பட்ட கஷ்டங்கள், அவமானங்கள் எல்லாம் மாறி இனி யோகத்தை அனுபவிக்கப் போகிறீர்கள். பிரிந்த உறவுகள் ஒன்று சேர்வர். வீடு, வாகனம், பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும்.

பரிகாரம்: ஷிரிடி சாய்பாபாவை வணங்கி வரவும். முதியோர்களுக்கு உதவி செய்யுங்கள்.

No comments: